மாங்கல்யம் (திருமாங்கல்யம்/தாலி) பலம் வலிமையாக இருக்க, மாங்கல்யம் செய்ய உகந்த நேரம் மற்றும் நாள்
மங்கல்யம் ➨ மாங்கல்யம் ➨ திருமாங்கல்யம் ➨ தாலி
மங்கல்யம் (திருமாங்கல்யம்/தாலி) செய்வதற்கு அல்லது கடையில் ரெடிமேட் ஆக தாலி வாங்குவதற்கு முகூர்த்தம் குறித்தல்
இந்த முகூர்த்தத்தில் கட்டாயமாக இரண்டாம் பாவகம் மற்றும் எட்டாம் பாவகம் சுத்தமாக இருக்க வேண்டும். இதில் எந்த கிரகங்களும் அமரக்கூடாது. அதாவது குறித்துக் கொடுக்கக்கூடிய முகூர்த்த லக்னத்திற்கு இரண்டாம் இடத்திலும் மற்றும் எட்டாம் இடத்திலும் எந்த கிரகங்களும் இருக்கக் கூடாது. சுப கிரகங்கள் கூட அமரக்கூடாது.
ஜாதகத்தில் திருமண ரீதியாக ஏதேனும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இருந்தாலும் கூட இந்த மங்கல்யம் முகூர்த்தத்தில் தாலி செய்யும் பொழுது அந்த தோஷம் நிவர்த்தி அடையும் மற்றும் அதன் தாக்கம் குறையும்.
அதுவே, நீங்கள் தாலி செய்யும் பொழுது இரண்டாம் இடம், எட்டாம் இடத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அது களத்திர தோஷத்தை, மாங்கல்ய தோஷத்தை அதிகரிக்கும்.
இந்த மங்கல்யத்தை திருமணம் செய்வதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக மட்டுமே செய்ய வேண்டும். திருமணத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, ஒரு மாதத்திற்கு முன்பு மங்கல்யம் செய்வது இது போன்று இருக்கக் கூடாது.
முதல் மங்கல்யத்திற்கு இதை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அதாவது திருமணத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக மட்டுமே மங்கல்யத்தை செய்து வாங்க வேண்டும். அதாவது முதல் திருமணத்திற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக மட்டுமே மங்கல்யத்தை தயார் செய்ய சொல்ல வேண்டும். நல்ல நகை தச்சர்களை வைத்து எந்தவிதமான குறைபாடும் இல்லாமல் மங்கல்யத்தை தயார் செய்து வாங்கலாம் அல்லது ரெடிமேடாக வாங்குவதாக இருந்தாலும் இந்த முகூர்த்த லக்னத்தில் சென்று வாங்கலாம்.
அதுவே, மருமங்கல்யத்திற்கு பிரச்சனை இல்லை. ஒரு மாதம் வைத்திருந்து கூட செய்யலாம்.
என்ன லக்னத்தில் மங்கல்யம் செய்யலாம் ?

ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் லக்னத்தில் மங்கல்யம் செய்யலாம்.
மங்கல்யத்திற்கு ஆகாத கிரகங்கள் ➨ செவ்வாய், சனி, சூரியன் (இவர்களின் லக்னத்தில் மங்கல்யம் செய்யக்கூடாது.)
ஜாதகத்தில் இவர்கள் மூன்று பேரில் ஏதேனும் ஒருவர் எட்டாம் இடத்தில் இருந்தால் மங்கல்ய தோஷம் என்று படித்திருப்போம். அதனால் இவர்கள் மங்கல்ய லக்னமாக அமையக்கூடாது.
மங்கல்யம் செய்ய நல்ல திதிகள் ➨ துவிதியை (அல்லது துதியை), திருதியை, பஞ்சமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி
வளர்பிறை திதியை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
குடும்பத்தில் மங்கல்ய தோஷம் உடைய பெண்ணின் பெற்றோர்கள் சண்டையில் இருந்தால் அல்லது அவர்களிடத்தில் ஒற்றுமை குறைவாக இருந்தால் கட்டாயமாக இந்த மங்கல்ய திதியை கடைப்பிடிப்பது நல்லது.
ஒரு சிலர் சப்தமி திதியை மங்கல்யத்திற்கு எடுத்துக் கொள்கிறார்கள். நாம் ஏன் எடுத்துக்கொள்ளவில்லை எனில் குரு பகவான் சப்தமி திதியில் தான் கடக ராசி, தனுசு ராசியில் திதி சூனியம் அடைவார். அந்த வகையில் குருவின் அருள் குறைவாக இருக்கும். அதனால்தான் இந்த திதியை நாம் தவிர்க்கிறோம்.
ஐந்தில் சனி, ராகு இருப்பவர்கள், குரு ஜாதகத்தில் பலவீனமாக இருப்பவர்கள் சப்தமி திதியை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.
எந்த நட்சத்திரத்தில் மங்கல்யம் செய்யலாம் ?
அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி
பெண் உடல் பருமனாக இருந்தால் அவிட்டம், மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் மங்கல்யம் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த நட்சத்திரத்தை தவிர்க்கவில்லை எனில் திருமணத்திற்கு பிறகு பெண்ணின் உடல் எடை அதிகரிக்கும்.
பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் ராகு சேர்க்கை இருந்தால் அனுஷம் நட்சத்திரத்தில் மங்கல்யம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
பெண்ணின் நட்சத்திரத்திற்கு தாராபலம் இருக்கக்கூடிய நட்சத்திரத்தில் தான் மங்கல்யம் செய்ய வேண்டும். அதாவது பெண்ணுடைய நட்சத்திரத்திலிருந்து நமது மங்கல்ய நட்சத்திரங்கள் தாராபலனில் பொருந்தி வர வேண்டும். அப்பொழுதுதான் மங்கல்யம் செய்வது சிறப்பு.
முக்கிய குறிப்பு:
திருமண பொருத்தம் பார்ப்பதிலிருந்து பெண் திருமணம் ஆகி மறுவீடு செல்லும் வரை பெண்ணின் நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் பார்த்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்.
மறுவீடு என்பது தமிழ் இந்து திருமணச் சடங்குகளில், சாந்தி முகூர்த்தத்திற்குப் பிறகு மணமக்களைப் பெண் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் சென்று விருந்தளித்து மகிழ்விக்கும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.
திருமண நிகழ்வில் பெண்ணின் நட்சத்திரத்திற்கு 85 சதவீதம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆணின் நட்சத்திரத்திற்கு 15 சதவீதம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
திருமணத்தின் போக்கு என்பது தாலி செய்வதில் இருந்து தான் முதலில் தொடக்கமாக அமையும். அதனால் மங்கல்யம் முகூர்த்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
தாராபலம் என்பது நட்சத்திரத்தின் பலமாகும்.




